Monday 7 January 2013

முல்லைத்தீவில் ஆசிரியர் பற்றாக்குறை; மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட 52 பாடசாலைகளில் 185 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையினால் 16,750 இக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ம.ராஜ்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் நடைபெற்ற இறுதிப் போரின் போது பல பாடசாலையின் கட்டடங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன் அதன் பௌதீக வளங்களும் அழிவடைந்துள்ளன.

மக்கள் இடம்பெயர்ந்து அதன் பின்னர் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு முல்லைத்தீவு கல்வி வலயத்திலுள்ள 56 பாடசாலைகளில் 52 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. ஆனால் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் நிலை பற்றாக்குறையாகவே உள்ளது.

இதில் ஆரம்பக்கல்விக்கு 73 ஆசிரியர்களும், இடைநிலை கல்வியில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு 59 ஆசிரியர்களும், ஆங்கில பாடத்துக்கு 29 ஆசிரியர்களும், உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு 15 ஆசிரியர்களும், கலைப்பிரிவு மற்றும் வர்த்தகம் பிரிவுக்கு 10 ஆசிரியர்களுமாக பற்றாக்குறை நிலவுகிறது.

இதனை விட வருடாந்த இடமாற்றம் பெறும் ஆசிரியர்களும், 2 வருட ஒப்பந்த அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது சேவையை நிறைவு செய்து இடமாற்றம் செல்ல இருக்கும் ஆசிரியர்களால் மேலும் ஆசிரியர் பற்றாக்குறை நிகழவுள்ளது.

இது தொடர்பாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற இருக்கும் இடமாற்றத்தில் இந்தப் பற்றாக்குறையை நிறைவு செய்து தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.