Saturday 19 July 2014

பொறியியல் துறை மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கல்

எமது கல்லூரியிலிருந்து சென்றாண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி இவ் வருடம் பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்படும் இரண்டு மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் வைபவம் இன்று கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் அதிபர் திருமதி.ச.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு பழைய மாணவர்களினதும் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கத்தினதும் அனுசரணையுடன் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இவ்வருடம் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கத்தின் மூலம் ”விக்ரோறியன்” க.செந்தில்நாதன் அவர்கள் இதற்கான நிதியினைப் பெற்று வழங்கியிருந்தார். இன்றைய நிகழ்வின் போது அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த ”விக்ரோறியன்” திரு.அ.சதானந்தவேல் அவர்களும் திருமதி.கந்தசாமி அவர்களும்  இம் மாணவர்களுக்கு மடிக்கணனிகளைத் தம் கரங்களினால்வழங்கினார்கள். 

கலைச்சொல் அகராதி (Encyclopedia) முழுமையாக இறுவட்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பிரதிகளை கல்லூரி நூலகத்திற்கு திரு.அ.சதானந்தவேல் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் செல்வன்.திருமூர்த்தி சேந்தன், செல்வி.சாருஜா செந்தில்நாதன் இருவரும் இவ்வுதவியை வழங்கிய அவுஸ்ரேலியா பழைய மாணவர் சங்கத்திற்கு (மெல்போன்) நன்றி தெரிவித்தனர்.திரு.அ.சதானந்தவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன், பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் Dr.செ.கண்ணதாசன் அவர்கள் நன்றி கூறினார்.