Saturday 18 April 2015

நம் பாரம்பரிய கலைகளை நினைவு கொள்ள பண்டிகைகள் நல்ல வாய்ப்பு!-

    தடை தாண்டல், வண்டில் ஓட்டம், தேசிக்காய் கரண்டி, தலையணை அடித்தல், முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் பேச்சுப்போட்டி, நடனங்கள், சிலம்பாட்டம், நகைச்சுவை நாடகம், பட்டி மன்றம், கற்பனை சரித்திர நாடகம் போன்ற அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
சித்திரைக் கொண்டாட்டம் பல இடங்களில் நடைபெறுகின்றது. பலர் பலவாறாக கொண்டாடுகின்றார்கள். அவரவர் சிந்தனைகள் மனப்போக்குகள் கொண்டாட்டங்களில் வெளிப்படும்.
பண்டிகைகள் எல்லாமே அநேகமாக அவரவர் பண்பாடுகளையும் அன்பு நெறி வெளிப்பாட்டையுமே வெளிப்படுத்த அன்று முன்னோர்களால் வகுக்கப்பட்டவை. ஆனால் காலம்செல்ல நவீனயுகத்தில் பண்டிகைகள் பல தமது சுயவடிவத்தை இழந்துபோய்விட்டன.
இன்று இங்கே சித்திரைக் கொண்டாட்டத்தை நடத்திய சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும் நல்லதை சிந்தித்திருக்கின்றார்கள். நமது பண்பாடுகளை நினைவுபடுத்தியிருக்கின்றார்கள்.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருக்கக்கூடிய நமது மண்ணில் இன்று அரைகுறை ஆடைகளோடு எங்கிருந்தோ ஒரு தரப்பு ஆடவும் இன்னொரு தரப்பு இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் கூச்சலையும் கும்மாளத்தையும் விதைப்பதையும் பல இடங்களில் நாம் காண்கின்றோம்..
பண்டிகைகள் எமது சமூகத்தின் பண்பாட்டின் வெளிப்பாடாக அமையவேண்டும்.