Saturday 23 November 2013

கல்வியபிவிருத்திக் குழுவின் (EDC) முயற்சியால் பாரதி முன்பள்ளிக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் .

சுழிபுரம் மேற்கு பாரதி கலாமன்றத்தினரால் நடாத்தப்பட்டுவரும் பாரதி முன்பள்ளியில் வரலாற்றிலே 16.11.2013 அன்று ஒரு பொன்னான நாளாகும். சுழிபுரம் கல்வியபிவிருத்திக் குழுவின் முயற்சியால் புலம்யெர்ந்து வாழும் அப்பிரதேச நலன்விரும்பிகளின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட முன்பள்ளியானது  உத்தியோகபூர்வமாக முன்பள்ளி சமூகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைந்துள்ள நிலமும்; புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுழிபுரம் பிரதேசத்தின்; கல்வியை அபிவிருத்திசெய்தலினூடாக பிரதேசத்தை அபிவிருத்தி செய்தலை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கல்வியபிவிருத்திக் குழுவாகும். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கல்வியபிருத்தியை மையமாகக் கொண்டு அப்பாடசாலையின் அதிபர் திரு வ. ஸ்ரீகாந்தன் தலைமையில் தொழிற்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் ஐக்கியராச்சியம் கனடா மற்றும் அவுஸ்திரேலியா பழையமாணவர் சங்கங்கள் இக்குழுவிற்கு பக்க பலமாக விளங்குகின்றனர்.
அந்தவகையிலேயே பாரதி முன்பள்ளிக்கான நிரந்தரக்கட்டம் ஒன்று தேவை என்ற கோரிக்கை இக்குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகள் கைகூடாத நிலையில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கையானது விக்ரோறியாக்கல்லூரியின் ஐக்கியராச்சிய பழையமாணவர் சங்க உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டபோது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த திரு சி இரவிசங்கர் அவர்கள் தனது சகோதரர் அமரர் சி சிவசங்கர் ஞாபகார்த்தமாக 34 இலட்சம் ரூபாவினை இப்புதிய கட்டட நிர்மாணத்திற்காக பாரதி கலைமன்றத்திடம் கையளித்துள்ளார். அதன் விளைவே இந்த புதிய முன்பள்ளிக் கட்டடத்திறப்புவிழா.
காலையில் நடைபெற்ற திறப்பு விழாவானது பாரதி கலை மன்றத் தலைவர் திரு து. இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. விக்ரோறியாக் கல்லூரி அதிபரும்; கல்வியபிவிருத்திக்குழுவின் தலைவருமான திரு வ. ஸ்ரீகாந்தன் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
முன்பள்ளியின் பெயர்ப்பலகை மற்றும் கல்வெட்டு திரைநீக்கம் சரஸ்வதி சிலை திறந்து வைத்தல் முன்பள்ளியை உத்தியோக பூர்வமாக கையளித்தல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்து வைத்தல் குழந்தைகளுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்குதல் விருந்தினர்களின் உரை போன்றவை இடம்பெற்றன.
மாலையில் விழாக்குழுத் தலைவர் திரு சரவணன் தலைமையில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். இதன்போது பாரதி முன்னிலைப் பள்ளியின் பழைய மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தற்போது லண்டனில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்தபோது இந்த பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத்திற்கென பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதனை அவர் செய்துள்ளார்.
இது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். வெளிநாடுகளில் இவ்வாறான பலர் இருக்கின்றபோதிலும், ஒரு சிலரே இவ்வாறாக பெரியளவிலான உதவிகளை செய்கின்றனர். தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளின் கல்வி நிலைமை மிகவும் பின்னடைவில் உள்ளது. எனவே இவ்வாறானவர்கள் கல்விக்கு ஊக்கம் தந்து வடக்கு கிழக்கு பகுதிகளை கல்வியில் தலைநிமிரச் செய்ய உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

See Photos 

See Videos
Clip 01
Clip 02

Welcome Dance

Bharathy Nursery New Building Opening Ceremony 1

Bharathy Nursery New Building Opening Ceremony 2

Bharathy Nursery New Building Opening Ceremony 3

Bharathy Nursery New Building Opening Ceremony 4