Saturday 7 June 2014

SriLanka School Cricket Association - Cricket Tournament

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் (SriLanka School Cricket Association) நடாத்தும் துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வருடம் மேற்படி சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் பங்குகொள்கின்றனர். மாவட்ட நிலையிலான இச்சுற்றுப் போட்டியில் எமது கல்லூரி அணியினருக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமான மோதல் இன்று நடைபெற்றது. 50 பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. 

இவ்வணியினர் விக்ரோறியா வீரர்களின் களத்தடுப்புக்கு முகம் கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி 41.5 பந்து பரிமாற்றங்களில் 158 ஓட்டங்களுக்கு சகல துடுப்புக்களையும் இழந்தனர். 159 ஓட்டங்களை வெற்றிக்கான இலக்காகக் கொண்டு களமிறங்கிய விக்ரோறியா அணி 23.1 பந்துப் பரிமாற்றங்களில் 3 துடுப்புக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 07 துடுப்புக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றது.

முன்னதாக யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் தி.மிதுஷன் 28 ஓட்டங்களை அதிகூடியதாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் கு.கிரிதரன் 18 ஓட்டங்களுக்கு 03 துடுப்புக்களையும் கி.பிரசாந் 25 ஓட்டங்களுக்கு 02 துடுப்புக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக கி.பிரசாந் 82 ஓட்டங்களையும் சி.கோகுலராஜ் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் குவித்தனர். விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. 

விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர் திரு.சி.சிவச்செல்வன், துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன், பயிற்றுநர்கள் “விக்ரோறியன்ஸ்” திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிதரன் ஆகியோர் கல்லூரி அணியினரை வழிப்படுத்தினர்.